திட்டமிட்டபடி வெளியாகிறது ‘மாநாடு’ - உற்சாக கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்
கடைசி நேரத்தில் ரிலீசில் இருந்து பின்வாங்கிய நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்பட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவிருந்து பின்னர் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் சிம்புவின் படம் ரிலீசாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
Thank q for all the love and support!! #MaanaaduFrom25thNovember #maanaadu pic.twitter.com/5JqCK3BO6Q
— venkat prabhu (@vp_offl) November 24, 2021
ஆனால் 'மாநாடு' படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டதால் படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் சிம்பு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.