‘’ஆடியோ விழாவில் நான் சிந்திய கண்ணீர் .. உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள் ‘’ - நடிகர் சிம்பு உருக்கம்
மாநாடு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து சிம்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வெற்றியை அளித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"மாநாடு" படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், மாநாடு படக்குழு, என் தாய், தந்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் இரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால் பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே. ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்.
வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துகளும் அன்புடன் சிலம்பரசன்" என்று தெரிவித்துள்ளார்.