மாநாடு திரைப்படம் விவகாரம் கட்சியினருக்கு அண்ணாமலை அதிரடி உத்தரவு
திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
அண்மையில் காவல்துறையை இழிவுபடுத்துவதோடு, கோவையில் இந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய மாநாடு திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளராக வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவரின் பேச்சு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை.
சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது. திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது.
நமது கட்சியின் சகோதர சகோதரிகள், சிலநேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற குழல் இருக்கிறது.
அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும்.
பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்! நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.