உங்கள நாய் கடிச்சாலும் அங்க போங்க...எடப்பாடி பழனிசாமிக்கு மா.சு ஆவேசமான பதில்
மருத்துவத்துறையை திமுக அரசு சீரழித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்த நிலையில் அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி அறிக்கை
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்த அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை உள்ளது என குறிப்பிட்டு, ஆனால், சுகாதாரத் துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை என சாடி இருந்தார்.
மேலும், திமுக அரசின் சுகாதாரத் துறை மந்திரி மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தார்.
மா.சு பதிலடி
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது பதிலளித்து பேசிய மா சுப்ரமணியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையை பார்க்கும்போது, இவர் எப்படி முதலமைச்சராக இருந்தார் என தோன்றுகிறது என கூறி, 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை தான் இரண்டரை ஆண்டுகளில் செய்திருப்பதாக மா சுப்ரமணியன் கூறினார்.
தான் இந்த இரண்டரை ஆண்டுகளில் செய்துள்ள பணிகளை பட்டியல் போட்டுத் தருகிறேன் என கூறிய அவர், 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை பட்டியல் போட்டுத் தரட்டும் என்று கூறி,. தன்னை விட அதிகமாக மருத்துவமனைகளில் ஆய்வு செய்து பணியாற்றி இருந்தால் அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருக்கிறது என கூறிய மா சுப்ரமணியன், அவருக்கு எங்கேயாவது நாய் கடித்தால் அவரை ஆரம்ப சுகாதார மையங்களிலேயே ஊசி போட்டுக் கொள்ளலாம்.என்றும் இந்த வசதி கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத்தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.