தமிழ்நாட்டில் இருந்து மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் - ஒப்புதல் கோரிய முதலமைச்சர்
மணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்த அனுப்ப ஒப்புதல் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரேன் சிங்கிற்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள்
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
இந்த இக்கட்டான நேரத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசு வலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஒப்புதல் வேண்டி முதலமைச்சர் கடிதம்
இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இ்நத மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும், மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி
— TN DIPR (@TNDIPRNEWS) August 1, 2023
1/2 pic.twitter.com/eWBQLDbGLb