கபாலீஸ்வரர் கல்லூரியில் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கபாலீஸ்வரர் கல்லூரியில் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை -
சென்னை, கொளத்தூர், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கபாலீஸ்வரர் கல்லூரியில் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்படும். கல்வி கட்டண விலக்கை அரசின் கடமையாக கருதுகிறேன். அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றார்.
இலவசங்கள் கூடாது என்று அறிவுரை சொல்ல சிலர் புதுசாக வந்திருக்கிறார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை.இதற்கு மேல் பேசினால் அரசியலாகிடும் அதனால் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை.
மாணவர்கள் படிப்பிலே கவனம் செலுத்த வேண்டும்.ஒரே ஒரு பட்டத்தோடு நிறுத்தி கொள்ளாதீர்கள். உயர்கல்வியை தொடருங்கள்.
குறிப்பாக பெண்கள் பட்டம் வாங்கியதுடன் நிறுத்தி கொள்ளாமல் தங்கள் படிப்புக்கு தகுந்த பணியே தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும்.
பொருளாதார ரீதியாக நீங்கள் சொந்த காலில் நிற்க கூடிய தன்னம்பிக்கையை பெண்கள் அனைவரும் பெற வேண்டும்.
முதலமைச்சராக அல்ல உங்கள் தந்தையாக நின்று இந்த நேரத்தில் நான் உரிமையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.