பாதை முடிந்த பிறகும் பயணம் முடிவதில்லை... நா முத்துக்குமாருக்கு 3 விருதுகள்
தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படவுள்ளது.
நா.முத்துக்குமார்
தமிழ் சினிமாவில் மறைந்தும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றவர் நா.முத்துக்குமார். அவரது வரிகள் இன்றளவும் நின்று பேசிக் கொண்டிருக்கிறது. தனக்கென தனி பட்டாளத்தை தனது எழுத்தின் மூலம் உருவாக்கியவர்.
காதல், பிரிவு, உத்வேகம் என அனைத்திற்குமான மருந்தை கொடுத்துச் சென்றிருக்கிறார். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் இருந்தவர்.
3 விருதுகள்
தொடர்ந்து, தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014ஆம் வருடங்களில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த 2016ஆம் ஆண்டு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டுவரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தற்போது தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளில் வாழும்..
இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நாளை மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், 3 வருடங்கள் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் பல படங்களில் பாடல் எழுதியதற்கும், 2013 தங்கமீன்கள், 2014 சைவம் திரைப்படத்திற்கும் என மூன்று விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விருதினை அவரது மகனான ஆதவன் முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்.