50 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு கொண்டு வந்த சந்திர மண்ணில் முளைத்தது தாவரம் - ஃபுளோரிடா விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை
கடந்த ஆண்டு, பிராணவாயு இல்லாத நிலவின் நிலப்பரப்பில் தாவரங்கள் ஏதாவது வளருமா என்று ஆராய்ச்சியில் அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பல்வேறு காலகட்டங்களிலிருந்து நிலவிலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட மண்ணில் மாற்றம் ஏதும் செய்யாமல் சிறிய குடுவைகளில் வைத்து அதில் விதைகளை பதித்து பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
அவர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. அந்த மண்ணில் விதைகள் அனைத்தும் முளைக்க தொடங்கியுள்ளது. இதனால், விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் -
சந்திர நிலப்பரப்பிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் முளைத்த தாவரங்கள் பூமியில் உள்ள தாவரங்களை போல் இல்லை. சந்திர மண்ணில் முளைத்த செடிகள், வளர்ச்சி குன்றி காணப்படுகிறது.
இருந்தாலும், இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து ஈடுபட புளோரிடா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மூலம் நிலவில் ஓரளவுக்கு தாவரங்கள் வளர முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும், இதுபோன்ற ஆய்வுகள் எதிர்காலத்தில் நிலவில் ஆக்சிஜனை உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சிக்கு நல்ல பயன் தரும்.
இவ்வாறு விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.