சென்னையில் ரூ.1000-த்தை கடந்த சிலிண்டர் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் நிலவி வருவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் விளைவாக சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்துவந்த நிலையில் இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மே ஒன்றாம் தேதி நாடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலின்டரின் விலை ரூ.104 வரை உயர்த்தப்பட்டன.
இதையடுத்து 19 கிலோ கமர்சியல் சிலின்டரின் விலை தலைநகர் டெல்லியில் ரூ.102.50 உயர்ந்து ரூ.2,355க்கு விற்பனையாகிறது. சென்னையில் 19 கிலோ கமர்சியில் சிலின்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை ஆகிறது. மும்பையிலும் விலை ரூ.102 உயர்த்தப்பட்டு, ரூ.2,307க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.