ஊர் மக்கள் மத்தியில் காலில் விழவைத்து சாதிய கொடுமை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா நடத்தியதால் ஊர் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளை எல்லாம் எடுத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளனர்.
அந்த கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமால், சந்தானம், ஆறுமுகம் ஆகியோர் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரியுள்ளனர் .
இது தொடர்பான படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உடனடியாக காவல்துறையும், மனித உரிமை ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.