முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ADMK TAMILNADU MKSTALIN
By Irumporai Aug 05, 2021 01:46 PM GMT
Report

எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர் மதுசூதனன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன்,கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார்.

சில மாதங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்,பின் மெல்ல உடல்நலம் தேறினார். பின், கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது இந்த நிலையில், இன்று ஆக. 05 மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்.

அதிமுகவின் அவைத் தலைவராகப் பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பாகும்.

ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சாதாரணத் தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகியவர்.

ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்