கட்டுக்கடங்காத கொரோனா - தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் - தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
1. +2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு, ஆனால் 12ம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
2. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு செல்ல அனைத்து நாட்களுக்கும் தடை.
3. சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து நாட்களிலும் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்படும்.
4. ஞாயிற்றுகிழமைகளில் அத்தியவாசிய பணிகளைத் தவிர முழு ஊரடங்கு அமலில் இருக்கும். பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.
5. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
6. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
7. வரும் 20 ஆம் தேதி முதல் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தடை
8. இரவு நேர ஊரடங்கில் பேருந்து, ஆட்டோ டாக்ஸிகளுக்கு அனுமதியில்லை.
9. அத்தியாவசிய தேவை மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு அனுமதியுண்டு.
10. தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
11. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்.
12. கல்லூரி, பல்கலை., தேர்வுகள் இணையவழி மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
13. இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி.
14. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
15. அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.
16. தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி.
17. திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமலும் அனுமதி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.