திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்களில் 100 சதவீதம் அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில்
மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து தற்போது கூடுதல் தளர்வுகளுடன், தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.