தமிழகத்தில் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? - ஊரடங்கில் புதிய தளர்வு?
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆலோசனையில், திரையரங்கு திறப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.