பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு கிடையாது - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு பிறகு, தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்திருக்கிறார்.
சென்னை திருவான்மியூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். இ
தனையடுத்து, அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள சரவணா ஆலோசனை மையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது -
தமிழகத்தில் தினசரி 2000 பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகின்றோம்.
வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை, மாலை பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்கு கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சென்னையில், 26 ஆயிரம் பேர் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இதில் சுமார் 21987 பேர் வீட்டு தனிமையில் இருக்கிறார்கள். நாளை பிரதமர், முதலமைச்சர் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க இருக்கிறார்கள்.
டெல்லியிலிருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நாளை மாலை 4-5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமை செயலகம் வர இருக்கிறார். 11 கல்லூரிகளில் 1450 மாணவர்கள் சேர்க்கப்பட இருக்கிறார்கள். ஒமிக்ரான் பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை. பாதிப்பில் 85 சதவீதம் ஒமிக்ரான் அறிகுறிதான் உள்ளது.
தற்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய வைரஸ் எல்லாம் பரவுகிறது என்று சொல்வதால் அதிக பாதிப்புள்ள கிளஸ்டர் ஏரியாக்களில் மட்டும் பாதிப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறோம்.
மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட கூடாது என்பதில் தமிழக முதலமைச்சர் மிகவும் உறுதியாக உள்ளார். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக ஆலோசனை செய்து முடிவுகளை மேற்கொள்வார்.
மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு கிடையாது.
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.