முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு - போலீசார் அதிரடி
கடந்த 19ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சி, மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கிடையில், வண்ணாரப்பேட்டை 49-ஆவது வார்டில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, திமுக வேட்பாளர் இளைய அருணா தலைமையில் திமுகவினர் 49 வார்டு வாக்குசாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போட முயற்சி செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு வந்த அதிமுக மற்றும் பாஜகவினர், திமுகவினரை தட்டிக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனையடுத்து, இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகன், பாஜக பிரமுகர் ராமையா ஆகியோரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து, திமுகவை சேர்ந்த ஒருவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக கூறப்பட்டது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 95 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 113 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.