திருமணத் தடை நீங்க சிறுமியை நரபலி கொடுக்க முயன்ற இளைஞர்கள் - நெஞ்சை பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம், நொய்டா, சிஜர்சி கிராமத்தில் 7 வயது சிறுமி கடந்த 13ம் தேதி திடீரென்று காணாமல் போனார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். சிறுமி கிடைக்காததால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தேட ஆரம்பித்தனர். அப்போது, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் சிறுமி டெல்லி பாக்பத் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் பின்பு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த சோனு பால்மிகி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, சோனுவையும், அவரது கூட்டாளியான நீது என்பவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சோனு, கூட்டாளியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

வாக்குமூலத்தில் சோனு கூறுகையில், எனக்கு எத்தனையோ இடங்களில் பெண் பார்த்தார்கள். ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. இதனால் நான் விரக்தி அடைந்தேன். இதனையடுத்து சதேந்திரா என்ற மந்திரவாதியை சந்தித்தேன். அப்போது, அந்த மந்திரவாதி ஹோலி பண்டிகை தினத்தில் ஒரு சிறுமியை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்.
இதனையடுத்து, இந்த விஷயம் சம்பந்தமாக என் நண்பர் நீதுவுடன் ஆலோசனை செய்தேன். அப்போ, நாங்கள் பக்கத்து வீட்டு சிறுமியை கடத்த பிளான் போட்டோம். இதனையடுத்து, அச்சிறுமியிடம் பாசமாக பேசி வரவழைத்து, கடத்திவிட்டோம்.
டெல்லியில் உள்ள பாக்பத் பகுதியில் உள்ள என் தங்கையின் வீட்டில் சிறுமியை தங்க வைத்தோம். அப்பகுதியில், சிறுமியை நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம். ஆனால், அதற்குள் நாங்கள் மாட்டிக்கிட்டோம் என்று வாக்குமூலம் கொடுத்தார்.
நல்லவேளையாக நரபலி கொடுப்பதற்கு முன்பு போலீசார் துரிதமாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மந்திரவாதியும், அவருடன் தொடர்பில் இருக்கும் மற்ற 3 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.