கடந்த 2 நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை - மதுரை முதல் இடம்
தீபாவளி பண்டிகையொட்டி கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
மது விற்பனை
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விடுறை நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும்.
பண்டிகை காலங்களான பொங்கல், தீபாவளி போன்ற காலங்களில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இதனை மிஞ்சும் அளவிற்கு தீபாவளி விற்பனையாக கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை
நேற்று சென்னையில் ரூ.51.52 கோடிக்கும், திருச்சியில் ரூ.50.66 கோடிக்கும், சேலத்தில் ரூ.52.36 கோடிக்கும், மதுரையில் ரூ.55.78 கோடிக்கும், கோவையில் ரூ.48.47 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.258.79 கோடிக்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம், சென்னை-ரூ.38.64 கோடி, திருச்சி-ரூ.41.36 கோடி, சேலம்-ரூ.40.82 கோடி, மதுரை ரூ.45.26 கோடி, கோவை ரூ.39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மது விற்பனையை இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை முறியடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.101.04 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.