தக்காளி பெட்டிகளுக்கிடையே மறைத்து கடத்தப்பட்ட மதுபாட்டில்கள்..3 பேர் கைது...
ராணிப்பேட்டை அருகே தக்காளி பெட்டிகளுக்கிடையே மறைத்து கடத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான 1920 கர்நாடக மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிக்கு சிலர் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் மூலமாக வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவ்வழியாக தக்காளி லோடு ஏற்றி வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் அரசு மதுபான பாட்டில்கள் பெட்டிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அந்த லாரியை தொடர்ந்து தக்காளி ஏற்றி வந்த அடுத்த லாரி மற்றும் வேனை மடக்கி போலீசார் சோதனையிட்ட போது அதிலும் தக்காளி பெட்டிகளுக்கு நடுவே கர்நாடக அரசு மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக இரண்டு லாரி மற்றும் ஒரு வேனை ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போலீசார், தக்காளி பெட்டிகளை முழுவதுமாக கீழே இறக்கி லாரியை முழுவதுமாக சோதனையிட்டனர்.மொத்தமாக ரூ.4 லட்சம் மதிப்பிலான 1,920 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் வேனின் உரிமையாளர் தாஜ்புரா பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் ஓட்டுநர் ராமநாதபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்த விஜய், மற்றும் மற்றொரு லாரியை ஓட்டி வந்த ஆற்காடு கொல்லபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகியோரை ஆற்காடு நகர காவல் துறையினர் கைது செய்தனர்.