மிகவும் சிறப்பு வாய்ந்த 2022ம் ஆண்டை என்னால் மறக்கவே முடியாது - மெஸ்ஸி நெகிழ்ச்சி...!
மிகவும் சிறப்பு வாய்ந்த 2022ம் ஆண்டை என்னால் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி
FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி கால்பந்து ரசிகர்களால் இதுவரை கண்டிராத மிகவும் உற்சாகமான கால்பந்து விளையாட்டானது. அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு லயோனல் மெஸ்ஸி தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்.
அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
இதனையடுத்து, மெஸ்ஸியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட அந்நாடு பரிசீலனை செய்து வருகிறது.
மேலும், கத்தாரில் லயோனல் மெஸ்ஸியின் தங்கியிருந்த ஹோட்டல் அறையை ஒரு சிறிய அருங்காட்சியகமாக மாற்றி அந்நாட்டு அறிவித்து அவரை கவுரவித்துள்ளது.
லயோனல் மெஸ்ஸி நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், உலகக் கோப்பை வெற்றிக்களிப்பில் மூழ்கி இருக்கும் மெஸ்ஸி இந்த புத்தாண்டை தனது மனைவி, குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், '2022-ஆண்டு முடிந்து விட்டது. இந்த ஆண்டை எனது வாழ்வில் ஒரு போதும் மறக்க முடியாது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை எப்போதும் துரத்திக்கொண்டு இருந்தேன். இறுதியில் அது 2022-ல் நனவாகி உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இத்தகைய மறக்க முடியாத நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது தேசம் மற்றும் பாரீஸ், பார்சிலோனா இன்னும் பல நகரங்கள், நாடுகளில் இருந்து எனக்கு கிடைத்த அன்பும், பேராதரவும், ஊக்கத்தினால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமும், சந்தோசமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.