உங்களுக்கு மனஅழுத்தம் அதிகம் உள்ளதா? கவலைவேண்டாம்... இதோ சிறந்த வழிமுறைகள்

lifestyle-health
By Nandhini Oct 18, 2021 08:15 AM GMT
Report

மன அழுத்தம் என்பது இயல்பான ஒரு விஷயம் தான். சாதாரணமாக உடல் அளவிலும், மனதளவிலும் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் உண்டாகிறது.

இந்த மன அழுத்தம் தான் நமக்கு தன்னம்பிக்கையை மற்றும் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய தைரியத்தை கொடுக்கிறது. ஆனால் இது அதிகமாகும் பொழுது மன உளைச்சலாக மாறி விடுகிறது.

அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. சாதாரணமான ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்கு தான். பணம் சம்பாதிப்பது நம் தேவைக்காக, பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே மன அழுத்தமும் வந்து சேர்கிறது. இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலா தனிமம் ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது.

மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகளைப் பார்ப்போம் -

புத்தகம் படிப்பது:

புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும்.

யோகாசனம் :

தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.

நடைபயிற்சி :

அலுவலகங்களில் (அ) பணியிடங்களில் ஏற்படும் மனஉலைச்சல்களை குறைக்க ஒரு எளிய வழி நடைபயிற்சி தான். ஆன்ம சுதந்திரத்தை பாழாக்கும் மனஅழுத்தத்தினை ஒரு தனிமையா நடைபயிற்சி போக்கிவிடும். அதேவேலையில் நெருங்கிய நண்பர் துணையுடன் செல்லும் நடைபயிற்ச்சியும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதினை மறுத்துவிட முடியாது.

பகிர்ந்து கொள்ளுதல்

நமது மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால், அது இரண்டு மடங்காகும். கவலையை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையும். எனவே உங்களது கவலைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள். அவ்வாறு உங்களது கவலைகளை பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவர் உங்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டியது அவசியம்.  

எழுதுதல்

நாவின் மூலம் வார்த்தைகளால் வலி வெளிப்படுவது குறைவு தான். ஆனால் எழுத்துக்கள் மூலம் அந்த வலி அதிகமாக வெளிப்பட கூடும். எனவே ஒரு காகிதத்தில் உங்களது மன சஞ்சலங்களை எழுதி, அதை கிழித்து போட்டுவிடுங்கள். அதோடு உங்களது மன அழுத்தமும் முடிவுக்கு வந்துவிடும்.

பிடித்த பாடல்கள் கேட்பது 

வீட்டில் நீங்கள் வேலை செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்தமான இசைகளை கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவது உடன், மன அழுத்தமும் குறைகிறது. இசைகள் மன அழுத்தம் குறைவதற்கு பெருமளவு உதவுவதாகக் கூறப்படுகிறது. அதற்காக சோகப் பாடல்களை கேட்காதீர்கள்.