உடலுக்கு வலிமை சேர்க்கும் சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை
lifestyle-health
By Nandhini
நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அதனால்தான் எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
அதுஎல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு, ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத் தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது. நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும்.
சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும். அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
தேவையான பொருட்கள்
- கம்பு - 2 கப்,
- தினை - 2 கப்,
- கேழ்வரகு - 2 கப்,
- ஏலக்காய் - 8,
- கருப்பட்டி - 4 கப்,
- தேங்காய்த் துருவல் - 2 கப்
செய்முறை
- கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்க வேண்டும்.
- அதனுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிசைந்த மாவை கொழுக்கட்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
- பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லித் தட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
- சுவையான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி.