காதுக்குள் பூச்சி நுழைந்தால் என்ன செய்வது? கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்!
மழைக்காலங்களில் வீட்டுக்குள் பூச்சிகள் வருவது இயல்பான விசயம் என்றபோதும், அது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தரையில் தூங்கும் முதியவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் மழை காலங்களில் இரவில் வீட்டுக்குள் வரும் பூச்சிகள் காதுகளுக்குள் சென்று விட அதிக வாய்ப்புண்டு. சில சமயம் எதிர்பாராத விதமாகக் காதுக்குள் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிடும். அந்த சமயத்தில் பொதுவாகப் பதற்றமும், கவலையும் நம்மைத் தொற்றிக் கொள்ளும்.
இதுபோல குழந்தைகளுக்கு நேர்ந்தால் இன்னும் குழப்பமும், சிக்கலும் அதிகமாகக் காணப்படும். காது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு. அதுவும் நுண்ணிய ஓட்டை கொண்ட நுழைவு என்பதால் எந்த பூச்சி, பொருள் நுழைந்தாலும் எடுப்பது மிகவும் சிரமம்.
காதினுள் பூச்சி நுழைந்தால் ஏற்படும் அறிகுறிகள் -
- காதினுள் ஒருவிதமான அசௌகரிய உணர்வு
- செவி அறையைச் சுற்றி உள்ள கிரானியல் நரம்புகளில் பூச்சி தொந்தரவு
- காதின் உள்ளே பூச்சி அங்குமிங்கும் நகர்வதை உணரமுடியும்
- சில பூச்சிகள் கடிக்காது. சில புச்சிகள் கடிக்கும்.
- கடிக்கும் தன்மை கொண்ட பூச்சி காதினுள் நுழைந்திருந்தால் அது கடிக்கும் போது வலி கடுமையாக இருக்கும்
- காதில் ஏதோ நிறைந்து இருக்கிற மாதிரி உணர்வு
பூச்சி நுழைந்து விட்டால் என்ன செய்யலாம்?
- காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் ஆலிவ் எண்ணெய் , பேபி ஆயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இதில் ஏதாவது ஒரு எண்ணெய் எடுத்து, காது நிரம்ப ஊற்றி விட வேண்டும். காதை காற்று புகாதவாறு மூடி விட வேண்டும். பின் பூச்சி இறந்து வெளியே வந்துவிடும். ஒருவேளை பூச்சி வெளியே வரவில்லை என்றாலோ அல்லது இறந்த பூச்சியை எடுக்க முடியவில்லை என்றாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அதன் தலை நம் காதில் உள்ள பகுதியை கடித்தவாறு காதுக்குள் தலை மாட்டிக் கொள்ளும். ஆகவே பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.
- இதுபோன்ற சமயத்தில் பட்ஸ் காதுக்குள் செலுத்துவது, கம்பி, ஊக்கு போன்ற எந்த பொருளையும் காதுக்குள் விட்டு பயன்படுத்துவது கூடாது. இப்படி செய்தால் நிலைமை இன்னும் மோசமாக்கிவிடும்.
பூச்சி காதுக்குள் சென்றால் தண்ணீர் ஊற்றலாமா?
- சிலர் காதுக்குள் பூச்சி சென்றால் தண்ணீரை ஊற்றுவார்கள். இவை மிகவும் தவறான செயல். ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது.