தோழிகள் இருவருக்கும் மலர்ந்த காதல் - ஒன்றாக சேர்ந்து வாழ கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கேரளாவை சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளர்களான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரு பெண்களும் ஒன்றாக சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்த 22 வயதான ஆதிலா மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த 23 வயதான பாத்திமா நூரா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இரு பெண்களின் குடும்பங்களும் நட்பாக இருந்ததால் அவர்கள் இருவரையும் சவூதி அரேபியாவில் ஒன்றாக படிக்க அனுப்பியுள்ளனர். அங்கு தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.

இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததையடுத்து, இருவரையும் அவர்கள் பிரித்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் 'லிவிங் டு-கெதர்' முறையில் ஒன்றாக இணைந்து வாழ முடிவெடுத்து, கடந்த மே 19-ம் தேதி ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
அவர்கள் கோழிக்கோட்டில் உள்ள வனஜா கலெக்டிவ் என்ற ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், பாத்திமாவின் உறவினர்கள், பாத்திமாவை கடத்திக்கொண்டு சென்றதையடுத்து, ஆதிலா போலீசில் புகார் அளித்திருந்தார்.
காதலர்களை அவர்களது உறவினர்கள் ஒரு வாரமாக பிரித்து வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தன் மகளை எப்படியாவது மனமாற்றம் செய்து அவளது பாலியல் எண்ணங்களை மாற்றும் முயற்சியில், சட்டவிரோத நடவடிக்கைகளில் பாத்திமாவின் தந்தை ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தங்களை சேர்த்து வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கேரளா நீதிமன்றம், ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரு பெண்களும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.