கடற்கரையில் அத்துமீறிய காதல் ஜோடி: தட்டிக்கேட்ட வழக்கறிஞர்கள் மண்டை உடைப்பு
சென்னை மெரினா கடற்கரையில் அத்துமீறிய காதல் ஜோடிகளை தட்டி கேட்ட வழக்கறிஞர்களின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையில், வழக்கறிஞர்கள் சிலர் துரித உணவகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது கடற்கரையில், ஒரு காதல் ஜோடி தகாத முறையில் அத்துமீறியசெயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காதலர் தனது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் நான்கு பேர், வழக்கறிஞர்களை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.
இதில், பாடியை சேர்ந்த வழக்கறிஞர் நாகராஜ் மற்றும் ராயபுரத்தை சேர்ந்த பிரதீப் இருவரின் மண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.