முன்விரோதம் எதிரொலி : சட்டக்கல்லூரி மாணவரை கொலை செய்து புதைத்த அதிர்ச்சி சம்பவம்
முன்விரோதம் காரணமாக சட்டக்கல்லூரி மாணவரை படுகொலை செய்து ஓடை மணலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அயன்கோடு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்லப்பன். இவருக்கு லிபின் ராஜா என்ற 23 வயது மகன் உள்ளார்.
இவர் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது 3-ம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். கடந்த 4-ம் தேதி இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.
அதன் பின்பு இரவு வெகுநேரம் ஆகியும் லிபின்ராஜா வீட்டுக்கு வராததால் செல்லப்பா தனது மகனுக்கு போன் செய்துள்ளார்.ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் செல்லப்பன் நாகர்கோயில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் பைக்கில் சென்ற தனது மகனை காணவில்லை என புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த நேசமணி நகர் போலீசார் லிபின் ராஜா காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில்,
லிபின் ராஜாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.
மேலும் லிபின் ராஜாவை கொலை செய்து நெல்லை மாவட்டம் பழவூர் நான்கு வழிச்சாலை அருகில் உள்ள வாய்காலில் புதைத்திருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று லிபின் ராஜாவின் உடல் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் இராதாபுரம் தாசில்தார் யேசுராஜன் முன்னிலையில் வெளியே தோண்டி எடுக்கப்பட்டது.
பின்பு திருநெல்வேலி அரசு மருத்துவர் பிரசன்னா தலைமையிலான குழுவினர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை முடிவில் லிபின் ராஜா எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரிய வரும்.
மேலும், லிபின் ராஜாவை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.