பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பாடகி லதா மங்கேஷ்கர் பூரண குணமடைந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கமும் வேகமும் அதிகரித்து வரும் நிலையில் திரையுலகம், அரசியல், விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் மும்பையை சேர்ந்த 92 வயதான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,
தெற்கு மும்பையில் உள்ள, 'பிரீச் கேண்டி' மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மராட்டிய மாநில மந்திரி ராஜேஷ் டோபே நேற்று மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
அப்போது அவர் மருத்துவர்களிடம் லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் பிரதித் சம்தானியிடம் பேசினேன். முன்னதாக, அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சில நாட்கள் சிகிச்சையில் இருந்தார்.
இப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவி தேவைப்படவில்லை. ஆக்சிஜன் மட்டுமே கொடுக்கப்படுகிறது.அவர் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது உடல் முன்னேற்றம் அடைந்து அவர் பூரணமாக குணமைடைந்துள்ளார். இந்த செய்தியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
1948 முதல் 1974 க்கு இடையில் 25,000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார். கடந்த 2001-ம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.