துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்டது
இந்திய திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி பாடகியாக விளங்கியவர் லதா மங்கேஷ்கர்.
பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கும் இவர் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அவரின் உயிரிழப்பு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சிவாஜி பார்க்கில் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு மந்திரிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்தனர்.
பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.