பெண்ணை நிர்வாணப்படுத்தி நடனம் ஆட வைத்த பெண் போலீஸ்
விசாரணைக்காக அழைத்து வந்த பெண் ஒருவரை பெண் காவல் ஆய்வாளர் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரின் ஜின்னா டவுன் காவல் நிலைய சரகத்தில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் விசாரணை என்ற பெயரில் அந்த பெண்ணை மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியதுடன் பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக அவரை நடனமாடவும் வைத்திருக்கின்றனர். இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை துணை ஐஜி முகமது அசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பார் குல் தாரர் என்பவர் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்தது உறுதியானது. இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக பணிநீக்கம் செய்த காவல்துறை, அவரை பணியில் இருந்து நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைத்துள்ளது.
மேலும் புஷ்ரா அஃப்சல், ஹூமா பைஃசல், உஸ்மா நஸ்ரின், ஃபாரா கலீல் மற்றும் சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பெண் போலீசாரே பெண் என்றும் பாராமல் அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.