கொரோனா உறுதியான நிலையில் தப்பி ஓடிய தொழிலாளர்கள்
சென்னை அம்பத்தூரில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தொழிற்சாலை தொழிலாளர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த அவர்கள் 11 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் தொழிற்சாலை உரிமையாளர் தாமோதரன் கொரோனா உறுதியான 3 பேரை மட்டும் பிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
மற்ற 8 பேர் அருகில் உள்ள மற்ற கம்பெனிகளில் வேலை செய்கிறார்களா? அல்லது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு தப்பிச் சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.