திருமாவளவன் கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது : எல்.முருகன் ஆவேசம்
ராமாயண மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்து உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய நிலையில், திருமாவளவன் கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்துடன் பேசுகிறார் என பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் நபகுத்தறிவு கருத்துகள் மூலமாக மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே ராமாயணம் மகாபாரதம் போன்ற புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில் திணித்துள்ளதாக கூறினார்.
மேலும் இந்த சனாதன இந்தியாவில் சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் நீதி கிடையாது எனவும், தனித்தனி தீவுகளாக இருந்த சமூகங்களை மாற்றி அமைத்ததில் இரண்டு இதிகாசங்களுக்கும் பெரும் பங்கு உண்டு என பேசினார்.
மேலும், தலித்துகளை சேர்த்துக்கொண்டு சிறுபான்மை வெறுப்பு அரசியலைக் விதைக்கிறார்கள். வன்முறை யுக்திகளைக் கையாளுகின்றனர். பாஜகவுக்கும் அரசுக்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான்.
அதனை தூக்கியெரிவதே அவர்களது மறைமுக நோக்கம்” என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "புராணங்கள் இதிகாசங்கள் குப்பைகள் என திருமாவளவன் கூறியுள்ளது கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என கூறினார்.
மேலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து ஒருவர் பாஜகவில் இருந்தால் அவர் சுயநலவாதி என்கிறார். அவர் எந்த சுயநலமும் இல்லாமல் இருக்கிறாரா? அவருடைய நோக்கம் என்ன? பாஜக ஆட்சியில் பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்? தமிழ்நாட்டில் பட்டியில் என அமைச்சர் எங்கு இருக்கிறார்? இதனை கூட்டணியில் இருக்கும் திருமா கேட்பாரா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.