‘இன்னும் என்ன வேணும் உங்களுக்கு’ - கண்ணீர் விடும் குல்தீப் யாதவ்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காததற்கான காரணம் குறித்து குல்தீப் யாதவ் மனமுருகி பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சில வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த காலங்களில் அணியில் பிரகாசித்தும் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் ஏராளமான வீரர்கள் உள்ளனர். அவர்களில் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் குல்தீப் யாதவ்வும் ஒருவர்.
கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது சுழற்பந்துவீச்சில் முதன்மை தேர்வாக இருந்த குல்தீப் யாதவ்வுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கொல்கத்தா அணியில் சரியாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடிய நிலையில், நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தனது நிலை குறித்து குல்தீப் யாதவ் மனம் உருகி பேசியுள்ளார்.
அதில் அவர் பயிற்சியாளருக்கு என்னை பற்றி தெரிந்து,நீண்ட நாட்கள் பழகி இருந்தால் எனது ஆட்டம் குறித்து தெரிந்திருக்கும். சில சமயங்களில் நான் அணியில் இடம் பெறுகிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியாது.
மேலும் என்னிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்றும் தெரியாமல் குழம்பி இருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக எங்களுக்கு அணி நிர்வாகம் விளக்கம் தரும். ஆனால் ஐபிஎல்லில் அப்படி இல்லை.
தற்போது கொல்கத்தா அணியில் நிறைய ஸ்பின்னர்கள் தேவை. ஆனால் என் மீது யாருமே நம்பிக்கை வைக்கவில்லை, எனது திறமையை யாரும் நம்பவில்லை என பல்வேறு சமயங்களில் எனக்கு தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.