பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிப்பு: கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே பெரியார் அம்பேத்கர் படங்கள் மீது அவமதிக்கும் வகையில் சாணி வீசியது அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் அம்பேத்கர் காலனியில் உள்ள மின்மோட்டார் அறையின் சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்கள் வரையப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் மற்றும் பெரியார் பிறந்த நாளன்று இந்த இடத்தில் இப் பகுதி மக்கள் விழா எடுப்பது வழக்கம். அந்த வகையில் நாளை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக அப் பகுதி மக்கள் பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்களுக்கு வண்ணம் தீட்டி புதுப்பித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்கள் மீது சாணியை கரைத்து ஊற்றி அவமதித்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியான அம்பேத்கர் காலணியினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி , இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.