கிருஷ்ணகிரி ஆணவ கொலையில் அதிமுகவுக்கு தொடர்பு : முதலமைச்சர் பேச்சால் பரபரப்பு
இன்று காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கிய நிலையில் கிருஷ்ணகிரியில் இளைஞர் ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்
இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரி பட்டினம் குறித்து கவன ஈர்ப்பை எழுப்பி உள்ளார். அதற்குரிய விளக்கத்தை விளக்கிட விரும்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரி பட்டினம் காவல் நிலைய சரகம், கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் (28) என்பவர் மார்ச் 21 அன்று சுமார் 1.30 மணியளவில் கே.ஆர்.பி.அணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முழுக்கான்கோட்டை கிராமத்தை சேர்ந்த சங்கர், அஇஅதிமுக கிளை செயலாளர் உள்ளிட்ட மூவர் ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக காவேரி பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விசாரணையில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியான சங்கரின் மகள் சரண்யாவை டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு அழைத்து சென்று 26-01-2023 அன்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
அதிமுகவினர் அமளி
இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சங்கர் காவல் துறையால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவதானப்பட்டி அதிமுக கிளை செயலாளர் என்பது காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளும் விழிப்புணர்வு பணிகளும் காவல்துறை, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூகநீதிகாக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூகநல்லிணக்கத்தை பேணிக்காத்திட்ட வேண்டும் என இந்த விளக்கத்தை அளித்து அமைகிறேன் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் விளகத்தை ஏற்க மறுத்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.