21 பேர் உயிரிழந்த கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் இதுவா? - அதிர்ச்சி தகவல்
21 பேரை பலிகொண்ட கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 விமானிகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் குறித்து 'விமான விபத்துக்கான விசாரணை’ அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. அதன் சாரணை அறிக்கை நேற்று வெளியானது.
இதில் இந்த விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. அதன்படி விமானத்தை தரையிறக்கும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணியாக இருக்கலாம் என்பதை புறக்கணித்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தரையிறக்குவதற்கு முன் விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமான இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல் தோல்வியடைந்ததும், விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஒடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியுள்ளார் என்பதும் காரணமாக இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.