கோவையில் கைவிரல் காயத்துக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி மர்ம மரணம்
கோவையில் கைவிரல் காயத்துக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நீலிகோணம்பாளையம் எனும் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரின் மகள் ஹேமவர்ணா.
கடந்த வாரம் ஏழு வயதான மகள் உட்பட தனது குடும்பத்துடன் மைசூருக்கு சென்று இருந்தார் கார்த்திகேயன். அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது கதவு இடுக்கில் ஹேமவர்ணாவின் இடது கை நடுவிரல் சிக்கி காயம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
அங்கு முதலுதவி மட்டும் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கார்த்திகேயன் குடும்பத்துடன் கோவைக்கு திரும்பினார். டாக்டர் முத்தூஸ் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் ஹேமவர்ணாவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தந்தை கார்த்திகேயன் கூறுகையில்,"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் படி ரூ.13,500 சிகிச்சைக்காக செலுத்தினோம்.
ஆனால் காய் விறல் காயத்துக்காக அனுமதிக்கப்பட்ட எனது மகள் பிணமாகவே வந்தால். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பல காரணங்களை கூறி வருகின்றனர்" என தெரிவித்தார். இதுபற்றி டாக்டர் முத்தூஸ் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, "சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என்னவென்று பார்பதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது சிறுமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கட்டியிருந்துள்ளது தெரியவந்தது.
கீழே விழுந்ததை பெற்றோர் சொல்லவில்லை", என தெரிவித்தனர். மேலும் பெற்றோரின் குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்த சிறுமியின் உடலை பிரேதபரிசோனை செய்ய அனுமதித்துள்ளதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக இதுபோன்ற நிகழ்வு இந்த மருத்துவமனைக்கு புதிதல்ல கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி கையில் ஏற்பட்ட காயத்திற்கு, சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் கிளையில் சிகிச்சைக்கு சேர்த்த போது உயிரிழந்தார்.
அப்போதும் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.