கொல்கத்தா அணியில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர் ? - அணி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் தொடக்கத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த கொல்கத்தா அணி, தற்போது சரிவை கண்டுள்ளது.
கொல்கத்தா அணி முதல் 4 போட்டியில் 3 ஆட்டங்களில் வென்று அசத்தியது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டினர். ஆனால் அடுத்த 5 போட்டிகளில் கேகேஆர் அணி தொடர்ந்து தோல்வியை தழுவியது.
நடப்பு சீசனில் மட்டும் கொல்கத்தா அணி 20 வீரர்களை பிளேயிங் லெவனில் விளையாட வைத்துள்ளது. வீரர்களை அடிக்கடி மாற்றி, பேட்டிங் வரிசையில் நிலையற்ற தன்மையை கொண்டு வந்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் குற்றம் சாட்டினார்.
மேலும், பயிற்சியாளர் மெக்குல்லம் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே விரிசல் ஏற்பட்டதும் தெளிவாக தெரிகிறது கடந்த சில போட்டிக்கு முன் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது குறித்து மெக்குல்லமிடம் வெளிப்படையாக ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் கேள்வி கேட்டது கேமிராவில் பதிவானது.
நன்றாக சென்ற அணி எப்படி தோற்றது என பலரும் யோசித்த நிலையில், அதற்கான காரணத்தை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார் ஸ்ரேயாஸ்.
மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய ஸ்ரேயாஸ், கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் செலக்ஷன் செய்வதில் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அணி வீரர்களிடம் இன்றைய போட்டியில் நீங்கள் இல்லை என்று சொல்வதற்கே கடினமாக உள்ளதாக ஸ்ரேயாஸ் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பிளேயிங் லெவன் தேர்வு செய்வதில் தமக்கு முழு சுதந்திரம் இல்லை என்று தெளிவாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறிவிட்டார். ஒரு அணியில் யார் விளையாட வேண்டும், விளையாட கூடாது என முடிவு எடுப்பதில் முழு அதிகாரம் கேப்டனிடம் மட்டுமே உள்ளது.
ஆனால் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் தலையிட்டால், அது அணிக்கு தான் சரிவை தரும். இதனால் கொல்கத்தா அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளார் ஸ்ரேயாஸ்.