கொஞ்சம் கூட அக்கறை இல்ல - விராட் கோலியை எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர்
விராட் கோலி இனிமேல் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஆஷிஸ் நெஹ்ரா எச்சரித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து வீசக்கூட முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
கே.எல்.ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் தவறான ஷாட் அடித்து அவுட் ஆனார்.
மீண்டும் ஒரு முறை விராட் கோலி குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர் இதற்கு முன்னரும் இதே போன்ற தவறை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் செய்திருக்கிறார் என்பதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி உள்ளே விளையாட வந்தால் குறைந்தபட்சம் அவரிடம் 100 ரன்கள் எதிர்பார்ப்போம். ஏனென்றால் கடந்த காலங்களில் அப்படியான ஆட்டத்தை தான் அவர் வெளிப்படுத்தியிருந்தார். சமீபகாலமாக சதம் அடிப்பதற்கு மிகவும் திணறி வருகிறார். முதல் இன்னிங்சில் கோலி ஆட்டமிழந்த விதம் நமக்கு மட்டுமல்லாது, அவருக்கும் வருத்தமாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.
நான்காவது ஸ்டெம்பில் சென்றுகொண்டிருந்த பந்தை அடிக்க முயற்சித்து விராட்கோலி ஆட்டம் இழந்துள்ளார். தொடர்ந்து இதே தவறை செய்து வருகிறார். முதல் இன்னிங்சில் ராகுல் ஆடிய விதத்தை பார்த்து விராத் கோலி வெளியே சென்ற பந்தை விளையாடாமல் விட்டிருக்க வேண்டும். இந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அவர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நெஹ்ரா கூறியுள்ளார்.