“இனிமேல் தான் தரமான சம்பவம் இருக்கு” - சபதம் எடுத்த விராட் கோலி: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பெங்களூரு அணியால் தக்கவைக்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சபதம் ஒன்றை எடுத்துள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2022ம் ஆண்டுகான ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இந்த முறை அதிரடி முடிவுகளை எடுத்திருந்தது.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் பெங்களூர் அணி 3 வீரர்களை மட்டும் தக்க வைத்துள்ளது. இதில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஊதியத்தை அந்த அணி நிர்வாகம் அதிடியாக குறைத்துள்ளது.
முதல் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள விராட் கோலி கடந்த ஐ.பி.எல். தொடரில் 17 கோடி ரூபாய் கொடுத்த பெங்களூரு அணி நிர்வாகம் , தற்போது ரூ.15 கோடி தான் தந்துள்ளது. இதுவரை ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்காமல் இருக்கும் விராட் கோலி கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி உள்ளது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் அவரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். அவர் பேசியுள்ள வீடியோவில் ஆர்சிபி அணியுடனான எனது பயணம் தொடர்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது, எந்தவித குழப்பமுமின்றி தெளிவாக இருந்தேன்.
ஏனென்றால் ஆர்சிபியில் தான் விளையாடப்போகிறேன் என்பது தெரியும். இத்தனை ஆண்டுகள் சிறப்பானதாக இருந்த இந்த பயணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நீடித்துள்ளது. ஆர்சிபி அணியின் புதிய ஆட்டத்தை அடுத்தாண்டிலிருந்து காணலாம்.
சிறப்பான தரமான சம்பவங்களை இனி தான் பார்க்கப்போகிறீர்கள். அடுத்தாண்டு என்ன நடக்கப்போகிறது என்பதை காண ஆவலுடன் உள்ளேன். எங்களுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அளவற்றது. புத்துணர்ச்சியுடனும், புதிய பரிமாணத்துடனும் அடுத்தாண்டு களத்தில் என்னை பார்ப்பீர்கள் என கோலி தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.