தோனி சொன்னதை நினைத்து கதறி அழுத விராட் கோலி - மலரும் நினைவுகள்
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த செய்தியை கேட்டு தாம் அழுதுவிட்டதாக விராட் கோலி கூறியதை அவரது ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி கடந்த இரு தினங்களுக்கு அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியடைந்தது.
இதனிடையே பலரும் விராட் கோலி குறித்த பல மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதல் டெஸ்டில் அப்போதைய கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை.
இதனால் அடிலெய்ட் டெஸ்டில் விராட் கோலி முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தினார். அந்தத் தொடரில்தான் பாதியிலேயே தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க கோலி முழுநேர கேப்டன் ஆனார். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு விராட் கோலி அளித்த பத்திரிகை பேட்டி ஒன்றில்டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த செய்தியை கேட்டு அழுதுவிட்டதாக விராட் கோலி தெரிவித்திருந்தார்.
அந்த பேட்டியில் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னை கேப்டன் ஆக்க முடிவு செய்திருப்பதாக அப்போது என்னிடம் வாரிய நிர்வாகிகள் தெரிவித்தனர். உண்மையாக சொல்கிறேன், நான் இப்போது டெஸ்ட் கேப்டனாக வருவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை. உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டேன்.
கொஞ்சம் அமைதியான பிறகு நான் என் அறைக்குச் சென்றேன். அந்தத் தொடரைப் பார்க்க வந்திருந்த அனுஷ்கா அங்கே இருந்தார், நான் அவரிடம் செய்தியைச் சொன்னேன். திடீரென்று இது எப்படி நடந்தது என்று அவருடைய உணர்வுகளும் கலந்தன. தோனி ஏன் இப்படி செய்தார் என இருவரும் பேசிக்கொண்டோம். இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கப் போகிறேன், அதுவும் நிரந்தரமாக என்ற விஷயத்தை அறிந்ததும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டுவிட்டேன். ஏனென்றால் இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தார்.
இப்போது விராட் கோலியின் நிலைமையை கண்டு கிரிக்கெட் ரசிகர்களே வருத்தமடைந்துள்ளனர்.