மீண்டும் வெடிக்கும் விராட் கோலி - ரோகித் மோதல் : கவலையில் ரசிகர்கள்
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா விலகியதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா பங்கேற்றால் தான் விளையாட மாட்டேன் என்று கோலி கூறியதாக கூறப்படுகிறது. தன்னிடம் இருந்த ஒருநாள் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித்திடம் வழங்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியில் இருந்ததாக காரணம் சொல்லப்படுகிறது.
மேலும் ரோஹித் இடம்பெற்றால் தான் விளையாடமாட்டேன் என்றும் பிசிசிஐயிடம் விராட் கோலி கூற, இதுதொடர்பாக ரோகித் சர்மாவிடம் பேசப்பட்டது. இதனையடுத்து தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க கவனம் செலுத்துவதாக கூறி ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
ரோகித் மற்றும் கோலி இடையே நேரடி மோதல் என்ற ஒரு செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டுள்ளதால் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவிக்காமல் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது விராட் கோலி விடுப்பு கேட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன்கள் மாறிய பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இணைந்து விளையாடதது அவர்களுக்கிடையேயான மோதலை உறுதி செய்துள்ளது.