கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது

சசிகலா kodanadmurdercase ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி
By Petchi Avudaiappan Oct 25, 2021 04:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி கொடநாடு பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் உள்ளது. இந்நிலையில் கடந்த 2016 இல் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து எஸ்டேட்டின் உரிமை முழுவதும் சசிகலாவுக்கு சென்றது. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதால் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். 

இந்த சூழலில் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ. 2 ஆயிரம் கோடி பணம், நகை மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்களின் பல்வேறு சொத்து ஆவணங்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஜெயலலிதா இருந்த காலத்தில் அவ்வளவு எளிதாக யாரும் கொடநாடு எஸ்டேட்டிற்குள் செல்ல முடியாது.

ஆனால், அவர் மறைந்த பிறகு ஏற்கனவே இருந்த பாதுகாப்புகள் அங்கு குறைந்து வெறும் காவலாளிகள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், கடந்த 2017 ஏப்ரலில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட கும்பல் கொடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து பணம், ஆவணங்களை கொள்ளையடிக்க சென்றுள்ளனர்.

அப்போது காவலாளி ஓம்பகதூர் தடுக்கவே அவர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதாவின் அறைக்கு சென்று பல்வேறு சொத்து மற்றும் இதர ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை நடந்த பிறகு முதல்குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார்.

அதற்கு அடுத்த நாளே இரண்டாம் குற்றவாளியான சயான் குடும்பம் சென்ற கார் கேரளாவில் விபத்தாகி மனைவியும் மகளும் இறந்துபோக பலத்த காயங்களுடன் சயான் உயிர் பிழைத்தார். கடந்த 4 வருடமாக இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் கனகராஜ் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜனின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் மூலம் பல முக்கிய புள்ளிகளின் பெயர் தெரிய வரலாம் என போலீசார் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.