ராகுலின் மோசமான கேப்டன்சி - கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் படுதோல்வியால் இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதல் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது.
இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை முழுமையாக இழந்துவிடும் என்பதால் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற இந்திய அணி நிச்சயம் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்திய அணியின் இந்த தோல்விக்கு கே.எல் ராகுலின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என தொடர்ந்து கடுமையாக வசைபாடி வருகின்றனர்.
இனி இந்திய அணி கே.எல் ராகுலிடம் கேப்டன்சியை ஒப்படைக்கும் முடிவை ஒரு போதும் எடுக்கவே கூடாது எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் விரைவில் பிசிசிஐ இதற்கு ஒரு நல்ல முடிவை எட்டும் அல்லது ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.