நாங்க எங்க தோத்தோம் தெரியுமா? - கேப்டனாக முதல் போட்டியில் தோற்ற கே.எல்.ராகுல்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விளையாட களமிறங்குகிறோம். அதுக்காக கடுமையாகவும் போராடுகிறோம். இப்போட்டியிலும் போராடினோம், இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக விளையாடி, வெற்றியை தட்டிப்பறித்துவிட்டனர். முதல் இன்னிங்ஸில் வெறும் 202 ரன்கள்தான் அடித்தோம். 50-60 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்போம்.
முதல் இன்னிங்ஸில் ஷர்தூல் தாகூர் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. பல போட்டிகளில் இக்கட்டான நிலையில் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் அஜிங்கிய ரஹானே, புஜாராவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
பல ஆண்டுகளாக டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்திய டெஸ்ட் அணியின் பெஸ்ட் மிடில் வரிசை வீரர்கள் இவர்கள்தான். தற்போது, சற்று தடுமாறி வருகிறார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பதால், மனவுறுதி அதிகரித்திருக்கும். இதனால், அடுத்த டெஸ்டில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் ரஹானே, புஜாரா ஆகியோர் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது
மேலும் மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற கடுமையாக போராடுவோம் என கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.