’’என்னப்பா இது சோதனை ’’ - டெஸ்ட்டிலிருந்து முக்கிய வீரர் விலகல் இந்திய அணிக்கு புதிய சிக்கல் ?
டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறிவிட்டது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் காயத்திற்கு மருந்து போடும் விதமாக இந்தியாவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. தற்போது அடுத்த வதத்திற்காக இந்தியா காத்திருக்கிறது. ஆம் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ரஹானே வழிநடத்துகிறார்.
டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷமி, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில். ஸ்ரேயாஷ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பரத், ஜெயந்த் யாதவ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் மீதான கவனம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ராகுல் களமிறங்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயத்தின் காரணமாகவே அவர் விளையாடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ராகுல் விலகுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படுகிறார்.