சிறுவனுக்காக ரூ.31 லட்சத்தை தூக்கி கொடுத்த கே.எல்.ராகுல் - என்ன நடந்தது?
இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் சிறுவன் ஒருவனுக்காக ரூ. 31 லட்சத்தை செலவு செய்துள்ள சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதனால் அவரின் சிறப்பான பேட்டிங்கை காண முடியாமல் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இதனிடையே கே.எல்.ராகுல் செய்துள்ள செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது 11 வயதாகும் வாரத் என்ற சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் எப்போதும் அவனின் ரத்த அளவு மிகக்குறைவாக இருக்கும். சிறியளவில் காய்ச்சல் வந்தால் கூட சரியாக மாதக்கணக்கில் ஆகுமாம்.
இதற்கிடையில் ஒரு கிரிக்கெட் வீரராக வலம் வர வேண்டும் என்ற மகனின் ஆசைக்காக மருத்துவ செலவுகளுடன் சேர்த்து கிரிக்கெட்டிற்கும் வாரத்தின் தந்தை அவனை அனுப்பி வருகிறார். ஆனால் இதற்கு எலும்பு மஜ்ஜை பிரச்சனை பெரிய துன்பமாக இருக்க அதனை சரிசெய்ய "கிவ் இந்தியா" ( Give India) என்ற அமைப்பின் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதில் அவர்களால் ரூ.4 லட்சம் மட்டுமே சேகரிக்க முடிந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்த கே.எல்.ராகுல் உடனடியாக ரூ.31 லட்சத்தை அனுப்பிவிட்டு சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதன்மூலம் வாரத்தின் அறுவை சிகிச்சையும் வெற்றிக்கரமாக நடந்துள்ளது. மேலும் சரியான நேரத்தில் பணம் அனுப்பி உதவிய கே.எல்.ராகுலின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.