தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார் : பிரபல வீரர் நெகிழ்ச்சி
தோனி குறித்து இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் கூறியிருப்பது ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது.
இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வந்த எம்.எஸ். தோனி கிரிக்கெட் உலகம் அவ்வளவு எளிதில் மறக்காது. அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்று வரை இவரை ரசிகர்கள் மிஸ் செய்வது சமூக வலைதளங்களை பார்த்தாலே தெரியும்.
இந்த நிலையில் இந்திய அணியின் வீரர் கே.எல்.ராகுல் தோனி குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கேப்டன் என்று கூறினாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது தோனியாக தான் இருப்பார். இந்த தலைமுறைக்கு அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் ஒரு கேப்டனுக்கு மிகப்பெரும் வெற்றியே சக அணி வீரர்கள் அவருக்கு மிகுந்த மரியாதையை கொடுப்பது தான். தோனிக்காக எங்களில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில் வாங்கிக் கொள்வோம்.யோசிக்க கூட மாட்டோம் எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஏற்றத்தாழ்வான சூழ்நிலைகளிலும், நிதானமாக எப்படி கையாள வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.