தோல்விக்கு இவனுங்க தான் காரணம் - ரிக்கி பாண்டிங் ஆவேசம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என டெல்லி அணியின் பயிற்ச்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று நடைபெற்றது.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 30* ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், முதல் ஓவரில் இருந்தே டெல்லி அணியின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் வந்த நிதிஷ் ராணா (13), தினேஷ் கார்த்திக் (0), இயன் மோர்கன் (0) போன்ற வீரர்கள் சொதப்பியதால், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஓவரை வீசிய ரவிச்சந்திர அஸ்வின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ராகுல் திரிபாதி 5வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், கொல்கத்தா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசியுள்ள டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “பவர்ப்ளே ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 10 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு உகந்ததாக இல்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அதிகம் திணறினார்கள் அதற்கு ஆடுகளம் தான் முக்கிய காரணம்.
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். ஹெய்ட்மர் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இல்லாமல் இருந்திருந்தால் எங்களால் 130 ரன்களை கூட யோசித்து பார்த்திருக்க முடியாது.
தோல்வியுடன் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது வேதனையையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. தவறுகளை நிச்சயம் சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.
You May Like This