5 தொடர் தோல்விகளுக்குப் பிறகு கொல்கத்தா வெற்றி... ராஜஸ்தானை வீழ்த்தியது
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதமடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா 48, ரிங்கு சிங் 42, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுக்க 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்த கொல்கத்தா அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.