குழந்தைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேளுங்கள் - கிருத்திகா உதயநிதி வேண்டுகோள்

childabuse kiruthigaudhayanidhi
By Petchi Avudaiappan Jan 22, 2022 08:42 PM GMT
Report

பெண் குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்டாலே தற்கொலை போன்ற முடிவுகளை தவிர்க்கலாம் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், சைல்டு அடோலெசென்ட் பவுண்டேஷன் இந்தியா என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில், நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிருத்திகா உதயநிதி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா, பிள்ளைகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது என்றார். மேலும் பிள்ளைகளின் விருப்பத்தை தெரிந்து அவர்களை வளர்க்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு யோகா, விளையாட்டு போன்ற ஆற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

பெண் குழந்தைகள் கல்வி என்பது மிகமுக்கியமான ஒன்று என்றும், ஒரு பெண் படித்தால் மட்டுமே அவளுடைய குடும்பத்தை நல்வழியில் எடுத்துச்செல்ல முடியும் என்றார். மேலும் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக கூறிய அவர், பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சனைகளை பெற்றோர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும், அதுபோன்று பெற்றோர்கள் கேட்டகாததால் தான் குழந்தைகள் தவறான முடிவுகளை எடுப்பதாக கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.